விலைமதிப்பற்ற செல்வம்...

 ஒரு நாள் கோவிலில் பக்தர்கள் தங்கள் பிரார்த்தனைகளை வேண்டிக்கொள்ளும் போது திடீரென கடவுள் அங்குள்ள பத்து பேருக்கு மட்டும் காட்சி அளித்தார். 




காட்சி தந்த கடவுள் அந்த பத்து பேரிடம் என்ன வேண்டும் கேளுங்கள் தருகிறேன்..! என்றார். அவரிடம் பத்து மனிதர்களும் தம் தேவைகளைக் கேட்டனர்.

முதல் மனிதர் : எனக்கு கணக்கிலடங்கா காசும்இ பெரிய பிஸினஸஷும் வேண்டும் என்றான்.

இரண்டாம் மனிதர் : நான் உலகில் சிறந்தோங்கி பெரிய பதவியை அடைய வேண்டும் என்றான்.

மூன்றாம் மனிதர் : உலகப்புகழ் பெற்ற நடிகர் போல் மிகப் பெரிய புகழ் வெளிச்சம் வேண்டும் என்றான்.

நான்காம் மனிதர் (ஒரு பெண்) : உலக அழகியைப் போல பேரழகு வேண்டும்..! உலகமே அதில் மயங்க வேண்டும் என்றார். 

இதுபோல மீதி இருப்பவர்களும் தங்களின் ஆசைகளையும் விருப்பங்களையும் கேட்டனர். கடவுளும் அவர்கள் கேட்ட ஒவ்வொன்றையும் அவர்களுக்கு வரமாக கொடுத்து விட்டார்.

இறுதியாக பத்தாவது மனிதர் : 
உலகத்தில் ஒரு மனிதர் உச்சகட்டமாய் எந்த அளவு மன நிம்மதியோடும் மன நிறைவோடும் வாழ முடியுமோ அந்த நிலை எனக்கு வேண்டும் என்றான்.

அப்போது இந்த ஒன்பது பேரும் அவனை திரும்பிப் பார்த்து சிரித்தார்கள். மன நிம்மதி மன நிறைவு நாங்களும் அதுக்குதானே இதையெல்லாம் கேட்டோம்..? விரும்பியது கிடைத்தால் மன நிறைவு கிடைத்து விடுமே..? என்று கேலி செய்தனர்.

கடவுள் அந்த ஒன்பது பேரிடமும் நீங்கள் கேட்டதைக் கொடுத்து விட்டேன்..! நீங்கள் போகலாம்..! என்று கூறினார்.
ஆனால் பத்தாவது மனிதனைப் பார்த்து நீ மட்டும் இங்கு இரு. நான் உன்னிடம் கொஞ்சம் பேச வேண்டும். நான் சிறிது நேரம் கழித்து வருகிறேன் என்று சொல்லிவிட்டு மறைந்தார்.

இப்போது அந்த ஒன்பது பேரும் போகாமல் அங்கேயே தயங்கி நின்றனர்..! கடவுள் அந்த பத்தாவது மனிதனிடம் என்ன சொல்லப் போகிறார். என்ன தரப் போகிறார் என்பது தெரிந்தே ஆக வேண்டும் என்று அவர்கள் மனம் அலைபாய்ந்தது. 

அவர்கள் விரும்பியது எதுவோ அது கையில் கிடைத்த பின்னும் இன்னும் எதுவுமே கிடைக்காத அந்த பத்தாவது மனிதன் மேல் பொறாமை கொண்டு மனம் வெதும்பினர். 

தாம் விரும்பியது கையில் இருப்பதை மறந்து விட்டனர். அதை அனுபவிக்கவும் மறந்தனர். அப்போதே அந்த இடத்திலேயே அவர்கள் நிம்மதி குலைந்தது. மன நிறைவு இல்லாமல் போனது. ஆனால் பத்தாவது மனிதர் கடவுள் சொல்லுக்காக எந்த பதற்றமும் இல்லாமல் காத்துக்கொண்டு இருந்தான்.

கடவுள் தன்னிடம் பேசப் போகிறார் என்பதிலேயே அவனுக்கு அவன் கேட்ட முழு மன நிறைவு கிடைத்துவிட்டது..!
நாம் பத்தாவது மனிதனா..? இல்லை.... பத்தாது என்கிற மனிதனா..? நீங்களே முடிவு எடுங்கள்..

எண்ணும் எண்ணங்களே உங்களைத் தீர்மானிக்கும். இனிமையான எண்ணங்களுடன் இவ்வுலகில் மகிழ்ச்சியுற்று வாழ பேராசை என்பதை ஒழித்து மன நிம்மதி என்ற விலைமதிப்பற்ற செல்வத்தை மட்டும் பெற்று வாழ்வோம்.

No comments